இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: கேரளாவில் இருந்து காதலனை தேடி வந்த இளம் பெண்ணை மீட்ட போலீசார்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. திருமணமாகி ஒரே வருடத்தில் சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. திருமணமாகி ஒரே வருடத்தில் சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு கணவர் வேலைக்கு சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த சிந்துவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித் நான், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

கணவன் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து காதலனை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் யாருக்கும் தெரியாமல் கிளம்பிவந்து வேடசந்தூரில் சமித்தை தேடி உள்ளார். அவர் எங்கும் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.

அந்தப் பெண்ணின் உதவியுடன் வேடசந்தூர் அண்ணா நகரில் இருந்து நூர்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று கொண்டே காதலித்த சமித் பற்றி விசாரித்த பொழுது, அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வருவதும் நூற்பாலை மேலாளர் இல்லை என்பதும் கொத்தனார் வேலை செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பொய் சொல்லி வந்ததும் தெரிய வந்தது.

அண்மைச் செய்தி: காதலுக்கு மரியாதை செய்து கோட்டை அமைத்த விஜய், அஜித்

இதனால் மனமுடைந்த சிந்து, தனது ஊருக்கு செல்ல முடியாமல் வேதனையுடன் மூன்று மாதங்களாக வேடசந்தூரிலேயே வசித்து வந்துள்ளார். சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது கணவர் அங்கிருந்தவாரே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய கேரளா பெண் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகி பழகி, சிந்து வேடசந்தூரில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து வேடசந்தூர் வந்த கேரளா போலீசார் வேடசந்தூர் போலீசாரின் உதவியை நாடினர். அதைத்தொடர்ந்து வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி தனிப்படையினர்  மற்றும் கேரளா போலீசார் இணைந்து சிந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்ற பொழுது அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு சிந்துவை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.