பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கும் இளம் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர்களுமே, நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. அந்த வகையில், ஆரம்பத்தில் பல போராட்டங்களை கடந்து, தோல்விகளையும், வலிகளையும் கடந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளவர் இளம் நடிகர் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும் படத்தில் நடிக்கத் தொடங்கி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்தொழில் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்தார். நடிகை கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், இந்த காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திருமண விழாவிலும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.







