பல்லடம் அருகே ஓட்டலில் புரோட்டாவுக்கு தயிர் வெங்காயம் கொடுக்காததால், ஓட்டல் உரிமையாளரும் புரோட்டா மாஸ்டரும் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தேரியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் பழனியாண்டி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். ராமு என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த ஓட்டலில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் கடந்த பத்தாம் தேதி புரோட்டா பார்சல் வாங்கியுள்ளார்.
அப்போது புரோட்டாவுக்கு தயிர்வெங்காயம் தருமாறு சஞ்சய் கேட்டிருக்கிறார். இதற்கு புரோட்டாவுக்கெல்லாம் தயிர்வெங்காயம் தருவதில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, புரோட்டா மாஸ்டர் ராமு வாடிக்கையாளர் சஞ்சயைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, தனது அண்ணன் அருண்பிரசாத்தை அழைத்துவந்த சஞ்சய், புரோட்டா மாஸ்டர் ராமுவையும், ஓட்டல் உரிமையாளர் பழனியாண்டியையும் விறகுக் கட்டையால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







