கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் காவிரியாற்றை பரிசல் மூலம் கர்நாடக வனப்பகுதியில் மான்வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு வந்த கர்நாடக வனத்துறை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இளையபெருமாளும், ரவியும் ஆற்றில் குதித்து தப்பிவிட ராஜாவின் கதி என்னவானது என்று தெரியவில்லை. இந்த நிலையில் பாலாறு நீர்தேக்கப் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ராஜாவின் உடல் மிதந்தது. இதனை காண உறவினர்களும், ஊர்மக்களும் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ராஜாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.