கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகும் காங்கிரஸ்! – வேட்பாளர்கள் பெங்களூரு வர அவசர அழைப்பு!!

 தேர்தலில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றுக்கு வரும்படி கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே…

 தேர்தலில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றுக்கு வரும்படி கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஏற்ற இறக்கத்துடன் முன்னிலை நிலவரம் இருந்து வந்தாலும், பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு வரும்படி, கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக நட்சத்திர விடுதி ஒன்றையும் காங்கிரஸ் முன்பதிவு செய்துள்ளது.

பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், ஆட்சி அமைக்க தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.