பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் கர்நாடகத்தில் எடுபடவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 73 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா ” பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமரின் எதிர்மறையான மற்றும் பிரித்தாளும் பிரச்சாரம் கர்நாடகத்தில் பலன் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.







