ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியின் காரணமாக, கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய காலதமாதம் ஏற்பட்டுள்ளதாக எம்பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி சென்றுள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ஆகிய இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக முதலமைச்சரை அறிவிப்பதில் 2 நாட்களாக இழுபறி ஏற்பட்ட நிலையில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவரும், கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான எம்பி செல்லக்குமார் நியூஸ் 7 தமிழின் சென்னை மண்டல தலைமை செய்தியாளர் சிரில் தேவாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
”காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியது. இந்தியாவில் எந்த கட்சியிலும் இதுபோன்ற பேச்சுரிமை கிடையாது. ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியின் காரணமாக, கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய காலதமாதம் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் நல்ல முடிவு இன்று அல்லது நாளை வெளியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. போட்டி என வந்துவிட்டால் போட்டியிடுபவர்களையும் அரவணைத்துச் செல்லும் இயக்கம் காங்கிரஸ். டி.கே.சிவக்குமார் கடுமையாக உழைத்திருக்கிறார். மக்கள் தலைவராக சித்தராமையா உள்ளார். இருவருமே கொள்கையில் உறுதியானவர்கள். எந்த சக்தி முயற்சி செய்தாலும் மகாராஷ்டிரா போன்ற நிலை வராது. அந்த பேச்சுக்கே இடமில்லை”.
இவ்வாறு எம்பி செல்லக்குமார் தெரிவித்தார்.