கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் முறைகேடு தொடர்பாக ரூ.300கோடிக்கு மேல் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத ஆகிய கட்சிகள் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
பாஜக வும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, நாள்தோறும் 1/2 லிட்டர் நந்தினி பால் இலவசம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் என தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் பல்வேறு கெடுபிடிகளை விதித்து பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழ்நாடு, ஆந்திரா , கோவா மற்றும் மகாராஷ்ட்ரா மநிலங்களை சார்ந்த தலைமை செயலாளர் மற்றும் தலைமை காவல் இயக்குனர் உள்ளிட்டோருடன் இணையவழி சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட மாநிலம் முழுவது 185 செக்போஸ்ட்கள் அமைத்து பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை கிட்டத்தட்ட 305 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. இவற்றில் ரொக்கமாக ரூ.110 கோடி, மதுபான பொருட்களாக ரூ.74கோடி , தங்கம் மற்றும் வெள்ளி ரூ.81கோடி, இலவசங்கள் ரூ.21கோடி, குட்கா மற்றும் போதைப் பொருட்கள் ரூ.18கோடி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 2346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.