1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வென்றது. அதேநாள் அந்த ஆட்டத்தை மும்பையில் தனது வீட்டில் இருந்து கண்டு களித்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
அன்றைய தினம் தான் நானும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் சச்சின்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இன்றைய தினம் (ஜூன் 25) இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதை தான் நானும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்கு உந்துசக்தியாக அமைந்துவிடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த அணிக்கு கபில் தேவ் கேப்டனாகச் செயல்பட்டார். கிரிக்கெட் என்றாலே அந்த காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசுர பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்தது. ஆனால், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் அதே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பை வென்றது.
பரபரப்பான அந்த இறுதி ஆட்டத்தில் முதல் விக்கெட்டை பல்வீந்தர் சாந்து கைப்பற்றினார். முதல் உலகக் கோப்பையை இந்திய அணி வென்று 39 ஆண்டுகள் ஆன நிலையில் ஆங்கில செய்தி இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இறுதி ஆட்டம் நடைபெற்ற அந்த நாளில் கபில் தேவ் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். நேர்மறையாகச் சிந்தித்தார். முதலில் விளையாடிய நாங்கள் 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது இது மிகவும் குறைவாக ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் நினைத்திருந்தால் இந்த இலக்கை எட்டியிருக்க முடியும்.
நாங்கள் பந்துவீச சென்றதற்கு முன் கபில் தேவ் எங்களிடம் பேசினார். அப்போது, “வெஸ்ட் இண்டீஸ் 184 ரன்கள் எடுக்க வேண்டும்! வாங்கள் போராடுவோம்” என்றார். நாங்கள் போராடி வென்றோம். 140 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டமிழந்தது.
முதல் உலகக் கோப்பையை இந்திய அணி வென்று 39 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் இப்போதும் அடிக்கடி சந்தித்து நிறைய விஷயங்கள் குறித்து விவாதிப்போம்” என்றார் பல்வீந்தர் சாந்து.
1983 இந்திய அணியில் கபில் அமர்நாத், கீர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, சுனில் கவாஸ்கர், சையது கிர்மானி, மதன் லால், சந்தீப் பாட்டீல், பல்வீந்தர் சாந்து, ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், சுனில் வால்சன், திலீப் வெங்சர்கார் ஆகியோர் இருந்தனர். கேப்டன் கபில் தேவுக்கு அப்போது வயது 24.
அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி 2011இல் உலகக் கோப்பையை வென்றது. அந்த அணியில் சச்சின் டெண்டுல்கரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Some moments in life inspire you & make you dream. On this day in 1983, we won the World Cup 🏆 for the first time. I knew right then, that’s what I wanted to do too!🏏 pic.twitter.com/hp305PHepU
— Sachin Tendulkar (@sachin_rt) June 25, 2022
-மணிகண்டன்