இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் நாயகன் நடராஜன் தான் எனவும் அவர் பயமின்றி சிறப்பாக பந்துவீசியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இவரின் அபாரமான பந்துவீச்சை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலும் நடராஜன் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி மூலம் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், இப்போதுள்ள பந்துவீச்சாளர்களை கண்டு தனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை எனவும் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய தெரியாமல் திணறுவதாக தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் தான் ஹீரோ என தெரிவித்த அவர் நடராஜன் எந்த பயமும் இன்றி பந்து வீசியதாக தெரிவித்தார். அதிலும் யார்கர் பந்துகளை அதிகம் வீசினார். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் யார்கர் தான் சிறந்த பந்து எனவும் அவர் தெரிவித்தார்.







