கள்ளக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அரசு டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காய்கறி வியாபாரி ஆவார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடு நீண்டநாளாக பூட்டி இருப்பதைக் கண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து படுக்கை அறையில் உள்ள இரண்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த குமார், வெங்கடேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மணலூர்பேட்டை வந்த வெங்கடேசன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கொள்ளை போனது தெரியவந்தது. உடனடியாக மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.







