முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களே…தமிழர்களே…நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன் என்று கூறியவர் கலைஞர் கருணாநிதி. 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர், 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், எல்லாவற்றிலும் முதல்வராக வாழ்ந்தவர் முதல்வர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
பதவி ஏற்றாலும், பதவி ஏற்காவிட்டாலும், அரசு என்பது கருணாநிதியிடம் தான் இருந்தது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நின்ற தேர்தலிலெல்லாம் வென்ற தலைவர் அவர் மட்டுமே, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர், நம் கண்முன் இருக்கும் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர், பரந்து விரிந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர் என்று புகழ்ந்துரைத்தார்.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத கலைஞர் மறைவிற்கு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மேடையேறினால் வெல்லும் சொல்லுக்கு சொந்தமானவர், அரசும், அரசியலும் அவரை இயக்கின, அவரது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும், அன்றைய தினம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
முதலமைச்சரின் அறிவிப்புக்கு திமுகவின் தோழமைக் கட்சிகளும் பாஜகவும் வரவேற்பு தெரிவித்தன.







