அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.
அப்போது, இடைக்கால ஜாமின் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவர்களும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் எனவும், அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்விராஜு, கெஜ்ரிவால் வழக்கு விசாரணை பட்டியல் குறித்து விளக்கம் கேட்டதையடுத்து, நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.







