மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விநியோகிக்கும் திறனை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் 2021ஆம் ஆண்டின் மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் மின்சாரத் துறையில் பல முக்கிய சீர்த்திருங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மின்சார விநியோகத்தில் ஒப்பந்தங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் பல முக்கியமான அம்சங்களை இந்த சீர்திருத்தம் கொண்டுள்ளது. இத்திட்டம் பிப்ரவரி மாதம், நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட்டின் போது முதல் முறையாக முன்மொழியப்பட்டது.
“மின் விநியோகத் துறை மோசமாக செயல்பட்டாலோ அல்லது அதிக மின் சுமையினால் ஏதேனும் தடை இருந்தாலோ மக்களுக்கு வேறு எந்த வழியும் இருப்பதில்லை என்றும், அவர்களின் புகார்களை தீர்த்து வைக்க வேறு எந்த முறையும் இல்லை என்பதால், நாங்கள் முன்மொழியும் இந்த முறையின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும் என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கமளித்திருந்தார்.
ஒரு நிறுவனம் அறிவிக்காமல், நியாயமான காரணம் ஏதும் இல்லாமல் மின்சாரத்தை தடை செய்தால், அந்நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மின் தடை குறித்து நிறுவனம், நுகர்வோருக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க இந்த மசோதா வகை செய்யும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றும்போது,நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு தமிழ்நாடு முதமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நாடு முழுவதும் பணி முடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்