மதுரை பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள பின்னக்கிள் இன்போடெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிறுவனம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவது தான் தமது இலக்கு எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.







