மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்று 4 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வருபவர்களுக்கு மகிந்திரா குழுமம் வேலை தர தயாராக உள்ளது என்று அந்தக் குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.
இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் “அக்னிபாத்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.
அந்தத் திட்டத்தால் ராணுவப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமாக உள்ள இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
எனினும், மத்திய அரசு இத்திட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

மேலும், அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்று பணிபுரிபவர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அக்னிபாத் திட்டத்தில் இணைந்து பணிபுரிபவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரும் வன்முறைகள் வருத்தத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் ஒன்றை கூறினேன். அதையே மறுபடியும் இங்கே கூறுகிறேன். அக்னி வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வழங்க உள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்







