சிறுவாணி அணையில் கூடுதல் தண்ணீரை திறந்து விட்டமைக்காக கேரள முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக சிறுவாணி அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுகொண்ட கேரள அரசு, நேற்று இரவு சிறுவாணி அணையில் கூடுதலாக தண்ணீரை திறந்து விட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் நன்றியை தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்