குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக் காலம் வரும் 10ம் தேதியோடு முடிவடைய உள்ளதை முன்னிட்டு, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜக்தீப் தன்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டுள்ளார்.
மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு:
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சித் தலைவர் சிபு ஷோரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மார்கரெட் ஆல்வாவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்சி எம்பிக்கள் அனைவரும் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. எனவே, அக்கட்சியின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என கூறப்படுகிறது.
இதனிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முடிவுக்கு மார்கரெட் ஆல்வா நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், வரும் 6ம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தன்னை ஆதரிக்க முன்வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் எம்பிக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரின் முக்கியத்துவம்:
இந்திய அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவருக்கு அடுத்த இடம், குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் இந்திய அரசின் முதல் தலைவர் என்றால், குடியரசு துணைத் தலைவர் இந்திய அரசின் இரண்டாவது தலைவர். அதோடு, குடியரசு துணைத் தலைவர்தான் மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர்.
யார் வாக்காளர்கள்:
குடியரசு துணைத் தலைவரை தேர்தெடுப்பவர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்கள். இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான், தேர்தலில் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. மக்களவை உறுப்பினர்களாக இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மதிப்பு வாக்கு கொண்டதாக அந்த வாக்கு இருக்கும்.
தேர்தல் அட்டவணை:
2022ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.