ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில நகைப் பட்டறை உரிமையாளர், ஆபரணங்கள் செய்ய கொடுத்த இரண்டு கிலோ தங்கத்துடன் தலைமறைவான நிலையில் டெல்லியில் வைத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா பகுதியைச் சேர்ந்த சானட் மைட்டி என்பவரது மகன்
சுஜித் மைட்டி (29). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்த சுஜித் மைட்டி
நகைப் பட்டறையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். விரைவாக தொழிலை கற்றுக்கொண்ட சுஜித் நகைப் பட்டறை ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். தனித்துவமான நகை வடிவமைப்புகளால் நகைக்கடை உரிமையாளர்களால் ஈர்க்கப்பட்டு ஆர்டர்கள் குவிந்து வந்தன.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடைய சுஜித் கடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முதலில் சூதாட்டத்தில் நிறைய பணம் எடுத்த
சுஜித் அடுத்தடுத்த ஆட்டங்களில் பணத்தை இழந்தார். மேலும் ஆபரணங்கள்
செய்வதற்காக வந்த தங்க கட்டிகளை விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட சுஜித்
தோல்விகளைச் சந்தித்து பணத்தை இழந்தார். இதனையடுத்து சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீண்டும் எடுப்பதற்கான சிறந்த வழி சூதாட்டம் என நினைத்த சுஜித் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை வாரி இறைத்தார். ஆனால், அதிலும் பணத்தை இழந்த நிலையில், சுஜித்திடம் நகை செய்வதற்காக தங்கக் கட்டிகளை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர்.
அப்போது, சுஜித் தன்னிடம் இருந்த இரண்டு கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு கோவையில் இருந்து மாயமானார். மேலும், தனது மனைவி, குழந்தைகளை
கொல்கத்தாவுக்கு அனுப்பிய சுஜித், இரண்டு கிலோ தங்க நகைகளுடன் டெல்லி சென்று
தப்பினார். இந்நிலையில், தங்கக் கட்டிகளை கொடுத்தவர்கள் சுஜித் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் துறையை அணுகியுள்ளனர்.
குறிப்பாக வடபழனி பகுதியைச் சேர்ந்த கனகராஜ், செட்டி வீதியைச் சேர்ந்த குருசாமி, டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் பெரிய கடைவீதி மற்றும் வெரைட்டிஹால்ரோடு ரோடு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்ததன்பேரில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான தனிப்படை போலீஸார் சுஜித் மற்றும் அவரது உறவினர்கள் செல்போன் எண்களை ஆய்வு செய்து டிரேஸ் செய்ய முயன்றனர்.
அதில் சுஜித்தின் செல்போன் எண் வாரணாசி, காசி உள்ளிட்ட பகுதிகளில் சென்றது தெரியவந்தது. தொடர்ச்சியாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் டெல்லியில் சுஜித் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.. அதன் அடிப்படையில் டெல்லி விரைந்த தனிப்படை போலீஸார் சுஜித்தை கைது செய்தனர். இதனையடுத்து சுஜித்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தங்கத்தை விற்று ஆடம்பர செலவு செய்ததுடன் நட்சத்திர விடுதிகளில் தங்கி பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தததும், மேற்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சுஜித்தை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், சுஜித்தை கோவை அழைத்து வந்துள்ள போலீஸார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-ம.பவித்ரா








