புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று உம்மிடி குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள இந்த தமிழ்நாட்டு செங்கோலை தயாரிக்கும் வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் உம்மிடி உடன் நமது முதன்மை செய்தியாளர் அன்சர் அலி கலந்துரையாடினார். அப்போது ஜிதேந்தர் உம்மிடி கூறியதாவது :
“இந்த செங்கோல் எங்கள் குடும்பத்தின் சொத்து. என்னுடைய மாமா, நாம் செய்யக்கூடிய நல்ல செயல்கள், அடுத்த தலைமுறைக்கு பலனைப் பெற்றுத் தரும் என்று கூறுவார். அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. என்னுடைய தாத்தாவின் உழைப்பு, இன்று எங்களுக்கு பெருமையை தேடித் தருகிறது. இந்த செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு, புதிய நாடாளுமன்றத்தில் இது இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்களின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பாக்கியம்.
இந்த செங்கோலின் அசல், அலகாபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது. இதுகுறித்த வரலாறு எப்படியோ தொலைந்து போயிருந்தது. செய்தித்தாளில் வந்த தகவலின் அடிப்படையில் தான், செங்கோலின் அசல் அலகாபாத்தில் இருப்பது தெரிய வந்தது. இதன்பின்னர், அசல் செங்கோலின் அளவுகளை கணக்கிட்டு, அதேபோன்ற மாதிரியை உருவாக்கியுள்ளோம்.
எங்களது குடும்பம் தயாரித்த பாரம்பரிய பொருட்களை சென்னை அண்ணா நகரில் உள்ள கிளைக் கடையில் காட்சிப்படுத்தினோம். அதன்பின்னர் பிரதமர், இதுகுறித்த முழுமையான தகவல்களை திரட்டி, எங்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது என்னுடைய 96 வயதாகும் பெரியப்பா எத்திராஜ் செட்டியார் செங்கோலின் வரலாறு பற்றி விவரித்தார். செங்கோலில் இடம்பெற்றுள்ள நந்தி, லட்சுமி ஆகியோரின் உருவங்களும், தமிழ் வரிகளும், இறைவனின் அருள் ஆட்சியாளர்களை வழிநடத்தும் என்பதைக் குறிக்கிறது. 3 கிலோ தங்கத்தால் இந்த செங்கோல் உருவாக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு ஜிதேந்தர் உம்மிடி தெரிவித்தார்.
நியூஸ்7 தமிழுக்கு ஜிதேந்தர் உம்மிடி அளித்த பிரத்யேக பேட்டியை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம் :