முக்கியச் செய்திகள்இந்தியா

“மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல.. தார்மீகத் தோல்வியும் கூட..” – INDIA கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தங்களுடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இந்திய கூட்டணியின் அனைத்து தோழர்களையும் வரவேற்கிறேன். நாங்கள் ஒன்றாகப் போராடினோம். நல்லிணக்கத்துடன் போராடினோம். முழு பலத்துடன் போராடினோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 18வது மக்களவைத் தேர்தலின் பொதுக் கருத்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானது. அவரது பெயரையும், முகத்தையும் முன்னிறுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேலும் பாஜகவுக்கு பெரும்பான்மை வழங்காததன் மூலம் அவரது தலைமைக்கு பொதுமக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர்.

தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல, தார்மீகத் தோல்வியும் கூட. ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்களை நாம் அனைவரும் அறிவோம். இந்த பொதுக் கருத்தை மறுக்க அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான அதன் நோக்கங்களில் உறுதியாக இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்தியக் கூட்டணி வரவேற்கிறது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

EZHILARASAN D

திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் சந்திரசேகர் – மகாலக்ஷ்மி

EZHILARASAN D

ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்! – புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading