கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மனநிம்மதியாக இருந்திருக்கும் என கோகுல்ராஜுன் தாயார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். அதில் முதல் குற்றவாளியான யுவராஜ் மற்றும் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த அவர், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சீத், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் பிரபு மற்றும் கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோகுல்ராஜின் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கைதட்டி வரவேற்றுவருகின்றனர்.
இதனை தொடர்ந்து கோகுல்ராஜின் தாயார் இன்று நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார் அப்போது, நீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பு இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த நீதி போராட்டத்திற்கு உதவிய வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி. சிபிசிஐடி காவல்துறையினர் பெருமளவில் உதவியாக இருந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்னர். 5 பேரை விடுதலை செய்யப்பட்டதை விடக் கூடாது அவர்களுக்கும் ஆயுள் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இந்த ஆட்சி வந்ததால்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. ஏழைகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிற நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், யுவரஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும். ஆனாலும் குற்றவாளிகளுக்கு கிடைத்துள்ள இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு ஆறுதலை தருகிறது என்று பேசினார்.