பணி நிரந்தரம் கோரி போராடும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் இன்று 24,882 இடங்களில் நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. நேற்று வரை 25 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் இருந்தது. இன்று 17 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வந்துள்ளது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“மழைக்காலம் வந்தாலே டெங்கு பரவும். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. டெங்கு பரவலை தடுக்கும் வகையில் மேலும் துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும்.” என்று கூறினார். மேலும்,
“இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். போராடியவர்கள் போராட்டம் நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
அதேபோல, “எந்த விழாவாக இருந்தாலும் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறை வழங்கி வருகிறோம். நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் ரத்து செய்ய முடியாது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை,விரைவில் அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம்.” என்று பதிலளித்துள்ளார்.