கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவது தடை செய்யப்படுவதாகவும் அவ்வாறு கூடாரம் அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொடைக்கானலில் புது விதமாக கூடாரம் அமைக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
நிலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி கூடாரங்கள் அமைத்து தங்குவதால் வனவிலங்குகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடாரம் அமைப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளோ தொடர்ந்து கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரசின் தடையை மீறி கூடாரம் அமைத்தால் நில உரிமையாளர்கள் மற்றும் கூடாரம் அமைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




