உயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி,…

தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி
தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி, வால்பாறையில் நடைபெற்ற அ.தி.மு.க.
நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக அவிநாசியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன் என்றார். எவ்வளவோ தடைகளை தாண்டி தொண்டர்கள் ஆதரவோடு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக விவசாயியான நான் பொறுப்பேற்றது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.

 

விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த அரசு ஜெயலலிதா அரசு. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்தினால் அவிநாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் நிறைவேற்றப்படாமல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்திருந்தால் தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும்.

 

ஒரு சொட்டு குடிநீர் கூட வீணாக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் குடிமராமத்து பணிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணிகளும் இல்லை. அந்த அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது வரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விடியா தி.மு.க. அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற முதியோர் உதவித் தொகையை கூட நிறுத்திவிட்டது. மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின் என குற்றம்சாட்டினார்.

முதியோர் உதவித்தொகை ,பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் எதுவும் கொடுக்கவில்லை. மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் மாநில அரசு இன்னும் குறைக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் மட்டும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசு தற்போது எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

 

மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது மின்சாரம் எப்போது இருக்கும் என்றே தெரியவில்லை. வருடத்திற்கு ரூ.15,000 கோடி வருவாய் மின்கட்டண உயர்வால் அரசுக்கு வருகிறது. ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 2ஆண்டு காலம் கொரோனாவால் மக்கள் கஷ்டப்பட்டனர். ஆனால் அதனை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர் என சாடினார்.

 

https://twitter.com/EPSTamilNadu/status/1568899363199655936

மேலும் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்திலும் மின்சார கட்டணம் உயர்வு குறித்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்றும், மக்களை வஞ்சித்து அவர்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயர்ந்திருப்பது மின் கட்டணமா? தங்களின் நிர்வாக திறமையின்மை கட்டணமா? என குறிப்பிட்டுள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.