ஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

செய்தி வாசிப்பில் தனது கம்பீரமான குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்த ஷண்முகத்தின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப்…

செய்தி வாசிப்பில் தனது கம்பீரமான குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்த ஷண்முகத்தின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி வந்தார். நியூஸ் 7 தமிழின் பேசும் தலைமை, பீனிக்ஸ் மனிதர்கள் போன்ற வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை கொண்டுவந்தார். தனித்த குரல் வளத்தால் தனக்கென ஊடக உலகில் தனி இடம் பிடித்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஷண்முகம் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது தற்போது இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.

அவரது உடலுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஷண்முகம் தாயாருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, ஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், செய்தி வாசிப்பில் தனது கம்பீரமான குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்த பத்திரிகையாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

 

அவரை இழந்து வாடும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.