ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22 வயதான மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை , அந்நாட்டு போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த அமினி, 3 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் கடுமையாக தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரானில் நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காஷ்ட்-இ எர்ஷாத் எனப்படும் அறநெறி போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தது, அந்நாட்டு பெண்கள் இடையே தணலாக இருந்து வந்தது. அதை, மஹ்சா அமினி மரணம் பூதாகரமாக்கி உள்ளது. இதையடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த போராட்டம் மூலம் பொதுமக்கள் வெளிகாட்டி வருகின்றனர் . ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாப்பை அகற்றியும், தலைமுடியை வெட்டிக்கொண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கொமேனிக்கு எதிராகவும் முழக்கமிட்டு வருகின்றனர்.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார், பொதுமக்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மஹ்சாவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதியளித்துள்ளார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து போராட்டத்தை பொதுமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே ஹிஜாப் போராட்டத்திற்கு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் நார்வே மீதும் குற்றஞ்சாட்டி, இரு நாடுகளின் தூதர்களுக்கும் அரசு சம்மன் அனுப்பி உள்ளது.