மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19-ஆம் நாள் பிறந்தவர். இவர் பெருந்தலைவர் காமராசரின் சீடராகவும், காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர். குமரி அனந்தன், தான் வாழ்வதற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையை குமரி அனந்தனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.