தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை இங்கு பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியன்று வெளியாவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான உத்தரவு மட்டுமே ஜனவரி முதல் தேதியில் வெளியாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜனவரிக்கு பிறகே நடத்தப்பட்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்பட்டு வருகிறது. காலதாமாக நடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இந்தாண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், காவல்துறை எஸ்.பி. பதவியில் இருந்து டிஐஜி பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை காலதாமதமின்றி வெளியானது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல் துறையில் டிஐஜி-க்கள் பதவியில் அதிக அளவு காலிப்பணியிடங்கள் இருப்பதால் இந்த பதவிக்கான உயர்வு மட்டும் காலதாமதமின்றி ஜனவரி மாதமே வழங்கப்பட்டது.
டிஜிபி முதல் டிஐஜிக்கள் பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி கூட்டம் மற்றும் அரசாணையை ஜனவரி 1ம் தேதியே வழங்குவதற்கான பணி முடிந்தது. பேனல் கமிட்டி கூட்டம் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் நடந்துள்ளது.இந்த ஆண்டு காவல்துறையில் காலியாக உள்ள டிஜிபி பதவிகள் 1992-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான மத்திய அரசு பணியில் இருக்கும் ஏடிஜிபி ராஜீவ் குமார், ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், கூடுதல் டிஜிபி வன்னியப்பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இதேபோல் 1998ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான காவல்துறை ஐ.ஜி. முருகன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன், மற்றும் ஐஜி அவி பிரகாஷ், சிபிஐயில் பணியாற்றி வரும் ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி, காவலர் பயிற்சி மைய ஐஜி அருண், மத்திய அரசு பணியில் இருக்கும் ஐஜி கல்பனா நாயக், உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, காவலர் நலன் பிரிவு ஐ.ஜி. சம்பத் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. காலிப்பணி இடங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதேபோல, டிஐஜிக்களாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளான காமினி, பிரவீன் குமார் அபினபு, நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, விஜயேந்திர எஸ்.பிதாரி, ஆனிவிஜயா உள்ளிட்டோருக்கு ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. 2009ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான காவல்துறை தலைமையிட ஏஐஜி டாக்டர் துரை, அம்பத்தூர் காவல்துணை ஆணையர் மகேஷ், என்ஐஏ கொல்லம் பிரிவு எஸ்.பி. தர்மராஜன், சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல்ஹக் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட உள்ளது.
பதவி உயர்வை வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும். 50க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாறுதலும் இருக்கும் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.