Chat GPT-ன் அடுத்த வெர்ஷன் அறிமுகம் : GPT-4ல் அப்படி என்னதான் ஸ்பெஷல்

ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனம், தற்போது மனிதர்களை போல் அதிகம் சிந்தித்து செயல்படும் GPT-4 என்ற அதன் புதிய அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. டெக்னாலஜி உலகில் இப்போது மக்கள் அதிகம்…

ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனம், தற்போது மனிதர்களை போல் அதிகம் சிந்தித்து செயல்படும் GPT-4 என்ற அதன் புதிய அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது.

டெக்னாலஜி உலகில் இப்போது மக்கள் அதிகம் பேசுவது OpenAI நிறுவனத்தின் ChatGPT AI கருவியை பற்றி தான். இந்த கருவி செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலியாகும். இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிப்பதோடு, மனிதர்களை
போலவே சிந்திக்கும் திறனையும் பெற்றுள்ளது. Microsoft நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் இந்த OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவால் பலர் வேலை இழக்கும்
அபாயம் உள்ளதாக அஞ்சப்படும் அதே சூழலில் நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது OpenAI நிறுவனம் மனிதர்களை போல் அதிகம் சிந்தித்து செயல்படும் GPT-4 என்ற ChatGPT-ன் புதிய அப்டேட்-ஐ
வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள ChatGPT மற்றும் பிற GPT-3.5 ஆகியவை உரைகளின் அடிப்படையிலான பதில்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் ஜெர்மன் செய்தி இணையதளமான Heise வெளியிட்டிருக்கும் தகவலின்படி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GPT-4 ஆனது
மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் கேள்விகளை புரிந்து கொண்டு செயல்படும் திறனை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. உதாரணமாக ஒரு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தைப் படம் எடுத்து அனுப்பினால், அது
என்ன படம் என்பதைச் சரியாக அடையாளம் காண்பதோடு மட்டும் அல்லாமல், உள்ளிருக்கும் பொருள்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பது வரை, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GPT-4-ஆல் கூற முடியும் என கூறப்படுகிறது.

அத்தகைய அம்சத்தை உருவாக்க Be My Eyes நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த GPT-4 இல் தகாத கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சாத்தியம் 82 விழுக்காடுகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான பதில்களை அளிக்கும் சாத்தியம் 40 விழுக்காடுகள் கூடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது OpenAI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GPT-4 ஐ GPT பிளஸ் பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியுமாம்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.