வேலைக்கு நிலம், ரயில்வே ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி
மற்றும் மகளுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 2004-2009 இடைப்பட்ட ஆண்டில் மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தவர்
லாலு பிரசாத் யாதவ். அதே காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக அவரின் மனைவி ரப்ரி தேவி இருந்தபோது நிலம் வழங்கினால் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் எனக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, ரயில்வே துறையில் பணி பெற்ற நபர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமோ
அல்லது அவர்களாகவோ லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மிக மிக
குறைந்த விலையில் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இது மிகப்பெரும் முறைகேடு ஆகும். இதனால், பல தகுதியுள்ள நபர்கள் பாதிப்படைந்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க: வெப்ப அலை: என்ன செய்ய வேண்டும்?… என்ன செய்யக் கூடாது?
இந்நிலையில், இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேர் மீது சிபிஐ
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, ராகினி யாதவ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, வழக்கின் விசாரணை முழுமை அடைவதற்கு முன்பாகவும், எந்த கைது நடவடிக்கையும் செய்யாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லாலு பிரசாத் தரப்பு கூறி ஜாமீன் வழங்க கோரியது.
இதனை ஏற்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி
ராப்ரிதேவி, மகள் ராகினி யாதவ் உள்ளிட்ட அனைவரும் தலா 50,000 ரூபாய் பிணை
தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீதான விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-ம.பவித்ரா