கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றது. அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் பலூன்கள் விண்ணில் வெற்றிகரமாக பறந்தன.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனடிப்படையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் வெப்ப காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு தலா ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்பட 8 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா, இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவை காண கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.