சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா- சீனா இடையில் எல்லை தகராறு ஏற்பட்டது. இதில் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை வெளியேற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இதில் இருதரப்பிற்கும் உயிர்சேதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளுக்கு இடையிலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராணுவ தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் பாண்டே கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறுகையில், சீனாவை ஒட்டிய எல்லையில் அந்நாடு தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா ராணுவம் தயாராக உள்ளது. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு துறையிலும் போதுமான படைகள் உள்ளது என்று கூறினார்.இந்தியா-சீனா பிரச்னை குறித்து தொடர்ந்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீனா உடனான 7 எல்லை பிரச்சினைகளில் 5 பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். எனினும், எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப போதுமான படைகளை நாம் எல்லையில் நிறுத்தி உள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவை ஒட்டிய வட எல்லையில் நாம் நமது கட்டமைப்புகளை வலுப்படுத்தி உள்ளோம். வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தற்போது அமைதி திரும்பி இருக்கிறது என மனோஜ் பாண்டே தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் யாங்ட்சே செக்டார் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்ற போது இந்திய வீரர்கள் அவர்களின் முயற்சியை தடுத்து அவர்களை பின்வாங்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.