ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்; செப்.2ல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்க விக்ராந்த் போர்க்கப்பல் வரும் செப்டம்பர் 2ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.  இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்…

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்க விக்ராந்த் போர்க்கப்பல் வரும் செப்டம்பர் 2ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இந்த போர்கப்பல் தயாரிக்கப்பட்டது. மேக் இந்தியா திட்டத்தின் கீழ், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கப்பல் கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் 4-வது மற்றும் இறுதி கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 2-ந்தேதி நடக்கிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போர் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கொச்சி கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம். கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் உள்ளது.

மேலும் கடற்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பு வலுப்படும். மேலும் கடல் கண்காணிப்பும் அதிகரிக்கும். மேலும் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இதன்மூலம் இந்தியாவும் இணைந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு கடற்படை கமாண்ட் வைஸ் அட்மிரல் எம்.எ.ஹம்பிஹோலி கூறுகையில், உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் வரவிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. ஏனெனில் இது விமானம் தாங்கி போர்க் கப்பல்களை வடிவமைத்து கட்டும் திறன் கொண்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் இணைவதற்கான திறனை நமக்கு வழங்குகிறது.

கடற்படையின் உள் வடிவமைப்பு இயக்குநரகம் – கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம், கப்பலை வடிவமைத்தது & கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் இது கட்டப்பட்டது. இது ஆத்மநிர்பர் பாரதத்தின் உண்மையான வெளிப்பாடு. உபகரணங்கள் மற்றும் சேவைகள் மூலம் கப்பலின் செலவில் சுமார் 76 சதவீதம் உள்நாட்டு செலவாகும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.