தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகின்ற நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது ஒமைக்ரான் தொற்று வீட்டுத் தனிமைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள், இணை நோய் இல்லாதவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானால், அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
“45 வயதுக்கு குறைவானவர்களுக்கு லேசான அறிகுறி இருப்பினும், வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். வீடுகளில் போதிய இட வசதி, காற்றோட்டம் இருத்தல் அவசியம். கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேலானவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழாக குறைதல், மூச்சுவிடுவதில் சிரமம், மார்பக பகுதிகளில் வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தொற்று உறுதியானதிலிருந்து 5 நாட்களுக்கு பின், காய்ச்சலோ அல்லது அறிகுறியோ இல்லாமல் இருப்பின், அவர்கள் தொடர்ந்து வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, அவர்களுக்கு மீண்டும் RT-PCR பரிசோதனை தேவையில்லை என்றும், லேசான அறிகுறி உடையவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லையென்றால் அவர்கள் வீடு திரும்பலாம் என்றும் இவர்கள் வீடு திரும்பும் முன், மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சையில் இருப்போர், RT-PCR பரிசோதனைக்கு பிறகு Negative என்று வந்தால் மட்டுமே வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றுக்கு இடைக்கால சிகிச்சை மையங்கள் அமைத்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களையும் மக்கள் நல்வாழ்வுத்துறை வௌியிட்டுள்ளது.
அதில், “ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதேனும் ஒரு கட்டடம் இடைக்கால ஒமைக்ரான் சிகிச்சை மையமாக செயல்படலாம். 30 படுக்கைகள் போதிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் லேசான/மிதமான அறிகுறி உடையவர்களை அனுமதித்துக் கொள்ளலாம்.” என்றும்
“ஆம்புலன்ஸ் ஒன்று எப்போதும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். போதிய மருந்துகள் இருப்பில் இருத்தல் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிற சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம் போல் செயல்படலாம்.
ஒமைக்ரான் நோய்த்தொற்றாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், காய்ச்சல் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். டிஸ்சார்ஜ் செய்யும் முன் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.