இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் அதிக மண் எடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார் என்பவர் இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பணிகளுக்காக ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மண் எடுக்கப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் தனது மனுவில், “பொன்னேரி தாலுகாவில் பெருங்காவூர் கிராமத்தில் 375 ஏக்கரில் ஏரி பரவியுள்ளது. இதனை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும் இந்த ஏரி பயன்பட்டு வருகிறது.
இந்த ஏரி வழியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிகளுக்காக குழாய்களை பதிப்பதற்கு சென்றம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த ஜி.ஆர்.வி. மினரல்ஸ் என்ற நிறுவனத்திற்கு 3 மீட்டர் மண் எடுக்கலாம் என குத்தகை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 15 மீட்டர் ஆழம் வரை ஏரி மண் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் ஏரி அழியும் அபாயம் உள்ளது.” என சர்வத்குமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ”சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளை தடுப்பதற்காக தாலுகா வாரியான குழுக்களை அமைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது, ஆனால் அது போன்ற குழுக்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக பெருங்காவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்க தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என சர்வத்குமார் தனது மனுவின் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.