இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களை, கடந்த 2 நாட்களில் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மீனவர்களின் படகுகளையும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை, திமுக எம்.பி.க்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில் அளித்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் எல்.முருகனும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்ததனர்.
மேலும், மீனவர்களை விடுவிக்கக்கோரி, இலங்கை அதிகாரிகளை, இந்திய தூதர் சந்திக்க உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.








