டி-20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, அதிகமானோர் பார்த்த போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12- சுற்றில், கடந்த மாதம் 24-ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இரண்டு வருடத்துக்கு பிறகு இரு அணிகளும் மோதியதால், அதிக எதிர்பார்ப்புக்குள்ளான போட்டியாக அது இருந்தது.
இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியை, எத்தனை பேர் பார்த்தனர் என்ற விவரம் இப்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதாவது 16.70 கோடி (167 million) பேர் இந்த போட்டியை கண்டு களித்துள்ளனர். இதன் மூலம் டி- 20 போட்டிகளிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு டி- 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டம்தான் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. அதை, 13.60 கோடி ரசிகர்கள் பார்த்திருந்தனர். அந்த சாதனையை இந்தியா – பாகிஸ்தான் போட்டி முறியடித்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.









