ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும். இதனிடையே அடுத்த குடியரசுத் தலைவராக யாருக்கு வாய்ப்புள்ளது என்ற விவாதங்களும் கூட சமீப நாட்களாக மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன.இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்,  “ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29 கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை ஜூன் 30ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூலை 2ம் தேதி கடைசி நாள் ஆகும்” என்று அறிவித்தார்.  மாநிலங்களவை செயலர் பிரமோத் சந்திரா மோடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான  தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். எம்எல்.ஏ.க்கள் வாக்கு  5,43,231 மற்றும் எம்.பி.க்கள் வாக்கு  5,43, 200 என மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. மொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறும். குடியரசுத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அதே வேளையில் நியமன உறுப்பினர்கள், MLC க்கள் வாக்களிக்க முடியாது.

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் எகிரத் தொடங்கிவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.