இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லி வந்தார். அவருக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்த அவர், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவில் 5 ட்ரில்லியன் யென் முதலீடு செய்யப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்தார். இதையடுத்து இந்தியா-ஜப்பான் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறினார்.