மும்பையில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான, 2-வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 150 ரன்களும் அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட் சாய்த்து சாதனைப் படைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக வைத்துள்ளது. அடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டாம் லாதம் (6), வில் யங் (20), ராஸ் டெய்லர் (6) ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினர். டேரில் மிட்செலை (60) அக்சர் படேல், அவுட் ஆக்கினார். டாம் பிளண்டெல் ரன் அவுட் ஆனார். ஹென்றி நிக்கோலஸ் 36 ரன்களுடன் ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை. முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்துவிட்டதாலும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதாலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாகிள்ளது.