இந்தியாவில் 2025-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முடிவுகள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது :
“மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. பின்னர் அந்தப் புள்ளி விவரங்கள் 2026ம் ஆண்டு வெளியிடப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி 2021-ஆம் ஆண்டு அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!
அந்த ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அடுத்த கணக்கெடுப்பு 2031ம் ஆண்டு நடைபெற்றிருக்கும். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டதால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் காலத்தில் மாற்றம் ஏற்படும். அதாவது 2025-க்குப் பிறகு 2035, 2045 என 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” இவ்வாறு தெரிவித்தன.







