நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், அந்தந்த மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவிப்பார். அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதலமைச்சர் காவல் விருது 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2023 சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வையொட்டி போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 6 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கபட்டுள்ளது.
அவர்களின் விவரங்கள்;
1. அஸ்ரா கார்க், ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர்.
2. வி.பத்ரிநாராயணன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
3. டோங்கரே பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
4. எம்.குணசேகரன், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர்.
5. எஸ்.முருகன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர்.
6. ஆர்.குமார், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380.
இவர்கள் அனைவரும் சுதந்திர தின விழா நடைபெறும் நாளன்று சென்னையில் நடைபெறும் விழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அனைவரையும் பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான நோடல் அதிகாரியாக ஏ.டி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி, என்.ஐ.பி சி.ஐ.டி, சென்னை நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா