ஷமி – பும்ராவின் அதிரடி ஆட்டம்; இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி,…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது
டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கி லாந்து அணி, 391 ரன்கள் எடுத்தது.

அடுத்து தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் (5 ரன்), ரோகித் சர்மா (21 ரன்), விராத் கோலி (20 ரன்), புஜாரா (45 ரன்), ரஹானே (61 ரன்) ஜடேஜா (3 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும் இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் நிலை சிக்கலானது. ஆனால், அடுத்த வந்த முகமது ஷமியும் பும்ராவும் நிதானமாக ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். பின்னர் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் ஷமி 56 ரன்களுடனும் பும்ரா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அணியின் தொடக்க வீரர்கள், ஆல் ரவுண்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பந்து வீச்சாளர்களான ஷமியும், பும்ராவும் இணைந்து அதிரடி காட்டியது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே ஆகியோரை பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆக்கினர். அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.