ஓமலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை சீசன் முடியும் தருவாயில்
டன்னுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். தொடர்ந்து மரவள்ளி நடவு பணிகளும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் உள்ள
25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் முள்ளுவாடி, தாய்லாந்து, 226 வெள்ளை, வருச வெள்ளை, பர்மா,
மான் கொம்பு, குங்கும ரோஸ் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இதையும் படிக்கவும்: யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு
மழை காரணமாக கடந்தாண்டு பல்வேறு கிராமங்களிலும் அதிகளவில் மரவள்ளி சாகுபடி
செய்யப்பட்டு இருந்தது. மேலும், நடப்பாண்டில் ஓரளவிற்கு விலை ஏற்றம் கண்டதால்,
விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். மரவள்ளி கிழங்கை தரம் பிரித்து, ஒரு
பாயின்ட் 440 முதல் 450 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிது.
விவசாயிகளிடம் இருந்து, மொத்தமாக வயலோடு கொள்முதல் செய்யும் வியாபாரிகள்,
கிழங்கு அரவை மில்லிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து ஜவ்வரிசி, மாவு
தயாரித்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி
வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு டன் 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வாரம் டன்னுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை உயர்ந்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை சீசன் முடியும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில், கிழங்கின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில், நடப்பாண்டு பல்வேறு பகுதிகளிலும்,
மரவள்ளி கிழங்கை அதிகளவில் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.







