தொடர் கனமழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாதுகாப்பு கருதி இன்று மாலை 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது புழல் நீர் தேக்கம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்த நீர்தேக்கத்தில் நீர்வரத்தானது தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2692 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான 21.20 அடியில் தற்போது 18.42 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி உபநீர் வெளியேற்றும் மதகுகள் வழியே, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி உபரிநீரானது மாலை 3 மணியளவில் வெளியேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உபரிநீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் தண்டல்கழனி, வடகரை,
வட பெரும்பாக்கம், மணலி புதுநகர், சடையன் குப்பம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கிஸ் அறிவுறுத்தியுள்ளார். இந்த உபரிநீர் திறப்பை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல் அடையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் இன்று மாலை 3 மணிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளை பாக்கம், நேமம் போன்ற ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்ட உயரம் 20.64 அடியும், மொத்த கொள்ளளவு 2764 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 1180 கன அடியுமாக உள்ளது. ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 89 மில்லியன் கன அடி நீர், உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக அளவில் உபரி நீர் திறந்தால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தன் காரணமாக இன்று மாலை 3 மணிக்கு, முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.