சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்காததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி சிவஞானம், சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.