தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று முதல் உயருகிறது.
இந்த பால் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும்.

தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 – 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த
விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில்
தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு
நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.
பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை
ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.







