டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியும் பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.
இதையும் படிக்கவும்: 2024 தேர்தலில் பாஜகவிற்கு போட்டியே இல்லை- உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள பிபிசி அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிபிசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் செல்போன்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








