திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடூவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது எய்ம்ஸ் என பொறிக்கப்பட்ட செங்கல் கேடயம் அவருக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச தேசிய, மாநில அளவில் கபடி வாலிபால் தொடர் ஓட்டம் கராத்தே என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழகத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர் வடுவூர் வீரர்கள், வீராங்கனைகள். வடுவூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வடுவூர் கிராம மக்களின் சார்பில் நிலம் தானமாக வழங்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிலை குழு தலைவராக இருந்த டி ஆர் பாலுவை சந்தித்த வடுவூர் விளையாட்டு கழகத்தினர் பொதுமக்கள் அந்த ஊரில் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் அந்த மனுவை அளித்து தொடர் நடவடிக்கையை டி.ஆர்.பாலு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமப் பகுதிக்கு என உன் விளையாட்டரங்கம் அமைக்க ஒப்புதல் அளித்து 6 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்த சும்மா 2400 சதுர மீட்டரில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், தரைத்தளம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேப்பில் உட் என்ற மரக்கட்டைகளால் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் எதிரொலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்
விளையாட்டுப் போட்டிகளை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இதில், அலுவலகத்துக்கும் சிறப்பு விருந்தினர் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தங்கவும் உடைமாற்றம் தனித்தனி அறைகளும், கழிவறைகள், குளியலறைகள், உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சி பாதை என அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது விளையாட்டு அரங்கிற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சக்கரபாணி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, ஏராளமான விளையாட்டு வீரர்கள், கிராம மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக எய்ம்ஸ் என பொறிக்கப்பட்ட செங்கல் போன்ற கேடயத்தை டி.ஆர்.பி.ராஜா உதயநிதியிடம் வழங்கினார்.
-ம.பவித்ரா







